உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா? பகுதி - 1

உங்கள் மாடி தோட்டம் சிறப்பாக அமைய கீழ்கண்ட வழிமுறைகளை தவறாமல் பின்பற்றவும்....

 1 – சூரிய ஒளி:

பொதுவாக மாடித்தோட்டம் அமைக்கும் போது குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தை தேர்ந்தெடுப்பது விளைச்சலை அதிகரிக்க உதவும்.


 2 – ஈரம் தாக்காமல் இருக்க:


தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில், தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தின் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும்.


 3 – இடவசதி:

காய்கறித்தோட்டம் போட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தைத் தேடி அலைய வேண்டாம்.
அதாவது மொட்டை மாடியில்  காய்கறியையும், மாடிப்படிகளில் கீரைகளையும், சன்னல் ஓரங்களில் ரோஜா என்று எல்லாவித செடிகளையும் நடலாம்.

 4 – தொட்டிகளாக:

தேங்காய் துருவியதும் கொட்டாங்குச்சிகளை தூக்கி எரியாமல் அவற்றில் கீரைகளை வளர்க்கலாம், வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் பழைய டப்பாக்கள், வாட்டர் கேன்கள், பக்கெட்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
லாரிப் பட்டறை, கார் ஒர்க் ஷாப் போன்ற மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களில் பழைய ஆயில், பெயின்ட் பக்கெட்டுகள், கிரீஸ் டப்பாக்கள் கிடைக்கும்.
காயலான் கடைகளில் கிடைக்கும் பழைய சின்டெக்ஸ், தகரங்கள், பெரிய பி.வி.சி பைப்புகள் மற்றும் பழங்களை அடுக்கப் பயன்படுத்தும் மரப்பெட்டிகள் ஆகியவற்றை வாங்கி வந்தும் செடி வளர்ப்புத்தொட்டிகளாகப் பயன்படுத்தலாம்.
இவற்றுக்கு அதிக செலவு பிடிக்காது. கிரீஸ் டப்பாக்களில் எண்ணெய் வாசம் போகும்படி நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.

 5 – விளைச்சலை அதிகரிக்க:

விளைச்சலை அதிகரிக்க நிலத்தின் ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.
இந்த மண் கலவை தயரானதும் உடனே விதைக்க வேண்டாம். 7-10 நாட்கள் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். அதன் பிறகு விதைப்பு செய்தால், நல்ல விளைச்சல் அதிகரிக்கலாம்.

 6 – தேங்காய் நார்கட்டிகள்:

ரெடிமேடாக விற்கும் தேங்காய் நார்கட்டியை கூட வீட்டுத்தோட்டதிற்கு பயன்படுத்தலாம். தேங்காய்நார் கழிவுக் கட்டியை, பாலித்தின் பையினை திறந்து, உள்ளே வைக்க வேண்டும். அதில் 10 லிட்டர் அளவு நீரை ஊற்ற வேண்டும்.
நன்கு ஊறிய தேங்காய் நாருடன் 2 கிலோ தொழுஉரம், உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூச்சிக் கொல்லிகளை தலா 10 கிராம் என்ற அளவில் கலந்து நன்கு கிளறிவிட வேண்டும்.

 7 – செடிகள் வளர்ப்பு முறை:

கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை, நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.
வெண்டை, முள்ளங்கி,  அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும்.

 8 – பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த:

பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
மேலும் பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஊற்ற வேண்டும்.

 9 – பருவக்காலங்களுக்கு ஏற்றவாறு:

அதாவது கோடை காலத்தில் இருமுறையும், குளிர் காலத்தில் ஒரு முறையும் ஒரு பைக்கு ஒரு லிட்டர் நீர் ஊற்ற வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டுமே பாசனம் செய்ய வேண்டும்.

மாடித்தோட்டம் பராமரிப்பு  – மாடித்தோட்டத்தில் செய்யக்கூடாதவை:

  • கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.
  • காய்கறி தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியை தேர்வு செய்யக் கூடாது.
  • பைகளை நேரடியாக தளத்தில் வைக்கக் கூடாது.
  • பைகளை தயார் செய்த உடன் விதைப்பு அல்லது நடவினை மேற்கொள்ளக் கூடாது.
  • மழை காலங்களில் நீர் ஊற்றக் கூடாது.
  • ராசாயன உரங்களுடன் உயிர் உரங்களை கலந்து இடக் கூடாது.
  • பைகளை நெருக்கி வைக்கக் கூடாது.







https://www.facebook.com/enmaadithottam


Comments

Popular posts from this blog

மாடி தோட்டத்தில் கத்தரிக்காய் சாகுபடி முறை மற்றும் பயன்கள் !!!

உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா? பகுதி – 2

மாடித்தோட்டத்தில் காலிஃபிளவர் பயிரிடலாம் வாங்க..!